புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வருகிற 28-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக அறிவித்துள்ளது.
புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியதாவது; “மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சட்ட விதிகளின்படி புதுச்சேரி நிர்வாக முழு அதிகாரமும் கவர்னர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியின்போது வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருந்தது. வெவ்வேறு கட்சிகள் ஆட்சி அமைந்தபோது அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டதால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டது. இதை கருத்தில்கொண்டு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துபெற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1998-ம் ஆண்டு நடவடிக்கை எடுத்தார்.
அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் இதுதொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை. புதுச்சேரி அரசின் நிர்வாகம் சொந்த வருவாயில் செயல்பட்டு வருவதால் மாநில அந்தஸ்து வழங்குவது மத்திய அரசின் கடமையாகும். மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாநில அந்தஸ்து வழங்க விருப்பமில்லாத சூழல் உள்ளது.

மக்களின் நலன் கருதி, புதுச்சேரி அரசு சுதந்திரமாக செயல்பட மாநில அந்தஸ்து தேவை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கைக்காக மத்திய அரசை வலியுறுத்தி, வருகிற 28-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் முழுஅடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம்.
இந்த முழுஅடைப்புக்கு மாநில அந்தஸ்தை விரும்பும் அரசியல் கட்சிகள், அனைத்து அமைப்புகள், பேருந்து உரிமையாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், வர்த்தக நிறுவனத்தினர் முழுஆதரவு அளிக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.