ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே, விருப்பாட்சி ஊராட்சியைச் சேர்ந்த சாமியார்புதூரில் தைப்பொங்கலை முன்னிட்டு, பொங்கல் பானைகள் தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆர்டர்கள் குவிவதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, வீடுகளில் புதுமண் சட்டியில் புத்தரிசியிட்டு, கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து வைத்து, குடும்பத்துடன் சக்கரைப் பொங்கல் வைப்பர்.
இதை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு கொடுத்து கொண்டாடி மகிழ்வர். இந்தாண்டு வரும் ஜன.14ம் தேதி பொங்கல் பண்டிகை தொடங்கி ஜன.18 வரை பல விழாக்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில், சாமியார்புதூரில் 15க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், பொங்கல் பானை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கல் பானை தயாராகும் முறை:
குளங்களில் களிமண் மற்றும் வண்டல் மண்னை வெட்டி எடுத்து பின்னர் பிசைந்து, ஒரு நாள் ஊற வைத்து மறு நாள் காலையில் மண்பானை தயாரிப்பில் ஈடுபடுவர். பிசைந்த மண்ணை சக்கரத்தில் இட்டு, பல்வேறு உருவங்களில் பொங்கல் பானைகளை உருவாக்குவர். இப்பானைகளில் அடி பகுதி ஓட்டையாக இருக்கும். ஓட்டையாக உள்ள சட்டிகள் காய்ந்த பின்பு, அடிப்பகுதியில் களிமண், வண்டல்மண் கலவையால் மூடி முழுமையான பானையாக உருவாக்குவர்.
பின்பு நெருப்புச்சூளையில் இட்டு சுட்டபின் பல்வேறு வண்ணங்களை பானைகளுக்கு பூசுவர். இவ்வாறு பொங்கல் பானை தயாரிக்கப்படுகிறது. இப்பானைகளை பயன்படுத்துவதன் மூலம் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ மற்றும் சுற்றுச்சூழலுக்கோ மாசும் ஏற்படாது என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
வியாபாரிகள் கொள்முதல்:
மேலும், தயார் நிலையில் உள்ள பொங்கல் பானைகளை திண்டுக்கல், மூலனூர், பழனி, ஒட்டன்சத்திரம், மார்க்கம்பட்டி, இடையக்கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு மதுரை, தேனி, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு எடுத்துச் சென்று விற்பனை செய்வர்.இது குறித்து மண்பானை தொழிலாளர்கள் கூறுகையில், ‘நாங்கள் கடந்த 50 ஆண்டுகளாக பொங்கல் பானை, கார்த்திகை விளக்கு, தண்ணீர் பானை, குழம்புச்சட்டி உட்பட பல்வேறு மண்பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றோம்’ என்றனர்.
கிராமப்புறங்களில் ஏராளமான பொதுமக்கள் மண்பாண்டங்களை பயன்படுத்தி இன்றும் உணவு பொருட்களை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.பொங்கல் பானை ஆர்டர்கள் குவிகின்றன. தற்போது பல உணவகங்களில் மண்பானை சமையல் என்ற பெயரில் உணவுகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் தற்பொழுது இம்மண்பாணை பொருட்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது’ என்று கூறினார்.