பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிஃப்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர் சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி அளவில் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் கூட்டுறவுத் துறையின் மூலம் மகளிருக்கு சுயஉதவிக் குழுக்கள் மூலம் கடன் தள்ளுபடி செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழக போக்குவரத்துறை அமைச்சர் இன்று வருகை தந்தார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மேல் தளத்திற்கு செல்வதற்காக லிஃப்டில் சென்றார். அப்போது திடீரென லிஃப்ட் பழுதாகி பாதியில் நின்றது. இதுகுறித்து தகவலறிந்த ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் லிஃப்ட் பழுது பார்க்கும் நபர்களை வரவழைத்து சரிசெய்தனர்.
இதையடுத்து சுமார் 15 நிமிடங்கள் லிஃப்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர் பத்திரமாக வெளியே வந்தார். இந்த சம்பவத்தால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.