மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் அவரை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சாருல். இவரது மனைவி ரேணுகா காத்தூன். இருவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், ரேணுகா காத்தூனை கடந்த 24-ம் தேதியில் இருந்து காணவில்லை என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் சந்தேகத்தின் பேரில் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் கணவர் முகமதுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரேணுகாவின் நடத்தை மீது முகமதுக்கு சமீப காலமாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ரேணுகா அழகு பயற்சி வகுப்பில் சேர்ந்து பியூட்டீஷியனாக பயிற்சி பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக பல முன்பின் தெரியாத ஆண்களிடம் அவர் பேசியது கணவர் முகமதுவுக்கு எரிச்சலையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், 24ம் தேதி மனைவியை பைக்கில் அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள காவ்வாய் பகுதிக்கு முகமது சென்றுள்ளார். அங்கு வைத்து மனைவியை கொடூரமாக கொலை செய்து துண்டுகளாக வெட்டியுள்ளார். உடல் பாகங்களை சூட்கேஸில் போட்டு மகாநந்தா நதியில் வீசியுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
இதையடுத்து, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் கால்வாயில் ரேணுகாவின் உடல் பாகங்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, ஒரு சூட்கேஸில் உடல் பகுதியை கண்டுபிடித்தனர். ஆனால், தலை மற்றும் மற்ற உறுப்புகள் இன்னும் கிடைக்கவில்லை.
டெல்லி ஷ்ரத்தா வாக்கர் கொலையைத் தொடர்ந்து, அதே பாணியில் பெண்கள் கொலை செய்யப்படும் நிகழ்வு சமீப காலமாக அரங்கேறி வருவது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.