“அழிவுப் பாதையில் தமிழ்நாடு” – பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த இபிஎஸ் கருத்து

சென்னை: தமிழகத்தில் கஞ்சா பிடிக்கப்படுகிறது என்று வரும் செய்தி சாதாரண செய்தியல்ல என்று தமிழ்நாடு அழிவுப்பாதைக்கு செல்லும் செய்தி என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று (ஜன.11) ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரம் முடிந்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சொல்கிறார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் பட்டியல் வைத்துள்ளேன். பொத்தாம் பொதுவாக கூறாமல் ஆதாரத்துடன் கூற வேண்டும்” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, சட்டம் – ஒழுங்கு குறித்த முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கொலை, கொள்ளை, செயின் பறிப்பு என்ற செய்திதான் நாள்தோறும் வருகிறது. அரசின் கவனத்திற்கு கொண்டு வர சபாநாயகர் அனுமதிக்கவில்லை. சென்னையில் திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக சென்ற பெண் காவலருக்கு திமுகவினர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். திமுகவின் முக்கிய பிரமுகர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 2 நாட்கள் கழித்துதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் காவலரே புகார் செய்தும், டிஜிபி விசாரணை செய்த பிறகே கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம் – ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது. போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து, சந்தையாக மாறியுள்ளது. தினந்தோறும் கஞ்சா பிடிபடும் செய்திகள் வந்துகொண்டே உள்ளது. சபாநயகர் நடுநிலையோடு அனுமதியளிக்காதது வேதனை அளிக்கிறது. கஞ்சா பிடிக்கப்படுவது தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வரும் செய்தி, சாதாரண செய்தியல்ல. தமிழ்நாடு அழிவுப் பாதைக்கு செல்லும் செய்தி” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.