மதம், கலாசாரம் எதுவாக இருந்தாலும், இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே என்று கூறிவரும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தற்போது, `முஸ்லிம்கள் இங்கு அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், தங்களின் ஆதிக்க பேச்சை அவர்கள் கைவிடவேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

நிகழ்ச்சியொன்றில் பேசிய மோகன் பகவத், “இந்துஸ்தானம் இந்துஸ்தானமாகவே இருக்க வேண்டும். இன்று இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், முஸ்லிம்கள் தங்களின் மேலாதிக்க பேச்சுகளை விட்டுவிட வேண்டும்.
அதோடு, `நாங்கள் உயர்ந்த இனம். ஒருமுறை இந்த மண்ணை ஆண்டோம், மீண்டும் ஆள்வோம். எங்களுடைய பாதை மட்டுமே சரியானது. நாங்கள் வேறுபட்டவர்கள், ஒன்றாக வாழ முடியாது’ என்ற கதைகளையும் முஸ்லிம்கள் நிறுத்துக்கொள்ள வேண்டும். இங்கு வாழும் அனைவருமே, அது இந்துவாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் சரி, இத்தகைய தர்க்கத்தை கைவிடவேண்டும்” என்று கூறினார்.

மோகன் பகவத்தின் இந்தப் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய ஒவைசி, “இந்தியாவில் முஸ்லிம்களை வாழ அனுமதிப்பதற்கும், அவர்களின் நம்பிக்கையை பின்பற்றுமாறு கூறுவதற்கும் மோகன் பகவத் யார்?” என விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.