சென்னை: பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2.21 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.318.30 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 2016-17-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் சென்னை நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020–21-ம் ஆண்டிலிருந்து இத்திட்டத்துக்கான காப்பீட்டு கட்டண மானியத்தில் மானாவாரி மாவட்டங்களுக்கு 30 சதவீதம், பாசன வசதி உள்ள மாவட்டங்களுக்கு 25 சதவீதம் மத்திய அரசு பங்களிப்பு, மாநில அரசின் 60 முதல் 65 சதவீத பங்களிப்பில் செயல்படுத்தப்படுகிறது
கடந்த 2021-22-ம் ஆண்டில், 37 மாவட்டங்களை உள்ளடக்கிய 14 தொகுப்புகளில் இணை காப்பீட்டுத் திட்டமாக 80:20 விகிதத்தில் இடர் நிகழ்வுகளை ஏற்றுக் கொண்டு, மாநில அரசுடன் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மற்றும் இப்கோ – டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தின.
அதன்படி, 2021-2022-ம் ஆண்டு குளிர் பருவ (ரபி) பயிர்களுக்கான தமிழக அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக ரூ.276.85 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் ரூ.152 கோடி, இப்கோ – டோக்கியோ பொதுகாப்பீட்டு நிறுவனம் ரூ.132 கோடி என ரூ.284 கோடியை இழப்பீட்டுத் தொகையாக 2.02 லட்சம் விவசாயிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள் ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால், மயிலாடுதுறையில் 80,357 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர் பாதிப்படைந்தது. 2022-23-ம் ஆண்டில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், அறிவிக்கை செய்யப்பட்ட 277 வருவாய் கிராமங்களுள், 87 வருவாய் கிராமங்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட பரப்பளவில், சுமார் ஒரு மாதம் வயதுடைய சம்பா நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிப்படைந்தது.
பயிர் காப்பீட்டுத் திட்ட விதிமுறைகளின்படி, 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட பரப்பளவில் பாதிப்பு ஏற்பட்ட 87 வருவாய் கிராமங்கள் விதைப்பு பொய்த்தல் இனத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு செய்த நடப்பு ஆண்டிலேயே இழப்பீட்டுத் தொகை வழங்க, 39,142 ஏக்கர் சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8,762 வீதம் 19,282 விவசாயிகளுக்கு ரூ.34.30 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட 2.21 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீட்டுத் தொகையாக ரூ.318.30 கோடி வழங்கப்படுகிறது.
இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியைத் தொடங்கி வைப்பதன் அடையாளமாக தலைமைச் செயலகத்தில் 5 விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டா லின் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.