ஈரோடு : பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.ஈரோட்டில் ஜவுளி சந்தையானது வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை நடக்கும். இந்த சந்தையானது ஈரோட்டில் கனி மார்க்கெட், ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் கூடும்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி(ஞாயிறுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளதையொட்டி, இந்த வாரம் கூடிய ஜவுளி சந்தையில் ஜவுளிகளை வாங்க தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். அதேபோல், ஈரோடு மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளான கவுந்தப்பாடி, கோபி, பவானி, மொடக்குறிச்சி, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சில்லரை விலையில் ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். இதனால், இந்த வாரம் மொத்த விற்பனையை விட சில்லரை விற்பனை அமோகமாக நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.