ஆண் மருத்துவர்களை அணுகக் கூடாது – பெண்களுக்கு தாலிபான் உத்தரவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என்று தாலிபான்கள் அரசு உத்தரவிட்டு உள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்கள் மீண்டும் கால் பதித்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஓராண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கும் தாலிபான்கள் இடைக்கால தடை விதித்து உள்ளனர்.

இந்நிலையில் தாலிபான் அரசு தற்போது புது உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதன்படி, பெண்கள் தங்கள் சிகிச்சைக்காக ஆண் மருத்துவரை அணுகக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு கல்வி கற்க உரிமை மறுக்கப்பட்டிருப்பதால் பெண் மருத்துவர்களும் அங்கு உருவாகாத சூழல் நிலவுகிறது. இதனால் உயிர் பயத்தில் பெண்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அண்ணனுக்கு உடல் உறுப்பு தானம் வழங்கவே வளர்க்கப்பட்டேன்; இளவரசர் ஹாரி அதிர்ச்சி தகவல்.!

ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், பெண் மருத்துவர்கள் பற்றாக்குறையால், நோய்வாய்ப்படும் பெண்கள் உயிரிழப்புக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என தாலிபான் அரசுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி உள்ளன. அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்கவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை அளிக்கவும் தாலிபான்களுக்கு வலியுறுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.