மகரஜோதி தரிசனம்.. தேவசம் போர்டு முக்கிய அறிவிப்பு!

கேரளாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 914 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் திருக்கோவில். சுயம்பு லிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது. சபரிமலைக்கு ஆண்டுதோறும் 4 முதல் 5 கோடி பக்தர்கள் வருகை தந்து இறைவனை தரிசித்துச் செல்கின்றனர்.

இந்த கோயிலில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வருகிறது. வரும் 14ம் தேதி சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மகர ஜோதி தரிசனத்தை காண நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர். கடந்த சில நாட்களாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.

மகர ஜோதி தரிசன நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

பம்பை முதல் சன்னிதானம் வரையிலும் பக்தர்கள் நெரிசல் இல்ல செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பாதுகாப்புப் பணிக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் சன்னிதானம் மற்றும் சபரிமலை முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் மகரவிளக்கு தினத்தன்று கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கிடையே கோவிலுக்கு வருகிற பக்தர்கள் நெரிசல் இன்றி சன்னிதானம் செல்லவும், அங்கு 18ம் படி ஏறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை சபரி மலை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

இதற்காக நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் வரை போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். நேற்று முதல் இவர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களைத் தவிர பேரிடர் மீட்பு படையினர், சுகாதார துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசன நாளான ஜனவரி 14ம் தேதி மதியம் 12 மணி வரை மட்டுமே, சன்னிதானம் செல்ல சபரிமலை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேப் போன்று, 12 மணிக்கு மேல் எந்த காரணம் கொண்டும் பக்தர்கள் பம்பையில் இருந்து, சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். 14ம் தேதி இரவு 8.45 மணிக்கு மகர சங்ரம பூஜை நடக்கிறது.

மறுநாள் ஜனவரி 15ம் தேதி முதல் பக்தர்கள் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு துவங்கி இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.