ஆன்லைன் ரம்மிக்கு 41 பேர் பலியாகியும் ஆளுநரின் மனம் இரங்கவில்லையா? – அன்புமணி கேள்வி 

சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு 41 பேர் பலியாகியும் ஆளுநரின் மனம் இரங்கவில்லையா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆன்லைன் ரம்மி தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3.5 லட்சம் பணத்தை இழந்த பாலன் என்ற பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் கடந்த 03.08.2021-இல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 41 ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த 3 நாட்களில் இரு இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை கொண்டது பெரும் சோகமாகும்.

தந்தைக்கு அனுப்ப வேண்டிய ரூ.50 ஆயிரத்தை ஆன்லைனில் சூதாடி இழந்தது தான் பாலனின் தற்கொலைக்கு காரணம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீள முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை மட்டுமே இளைஞர்களை மீட்கும்; காக்கும்.

41 உயிர்கள் பலியான பிறகும், 88 நாட்களாக காத்துக்கிடக்கும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது கண்டிக்கத்தக்கது. இனியும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.