
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 58 பேர் காயமடைந்த நிலையில், 14 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. போட்டியில் பங்கேற்பதற்காக 300 வீரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 280 பேர் பங்கேற்றனர்.
இதில் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 260 பேர் போட்டியில் பங்கேற்றனர். ஒரு சுற்றுக்கு 25 பேர் என 11 சுற்றுகள் நடைபெற்றது. போட்டி துவங்குவதற்கு முன்பாகவே காளை மாடுகளுடன் வரிசையில் நின்ற மாட்டின் உரிமையாளர்கள் பலர் காயம் அடைந்தனர்.

தொடர்ந்து போட்டிகள் நடைபெற்ற நிலையில் மாடு பிடி வீரர்கள் 26 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 23 பேர், பார்வையாளர்கள் 9 பேர் என 58 பேர் காயமடைந்தனர்.
இதில் பலத்த காயமடைந்த 16 வயதான சிறுவர்கள் இருவர் உட்பட 14 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாட்டின் உரிமையாளர்கள் அதிக அளவில் காயம் அடைந்தனர்.
மாட்டின் உரிமையாளர்கள் இருவர் மட்டுமே மாடுகள் உடன் வரவேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டதால் வரிசையில் நின்ற மாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் மாட்டின் உரிமையாளர்கள் அதிகமான பேர் காயம் அடைந்தனர்.
newstm.in