வருண் காந்தியை நேரில் சந்தித்தால் அவரை கட்டியணைத்துக் கொள்வேன். ஆனால் அவரது சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்குச் செல்லமாட்டேன். அதற்கு முன்பாக, என் தலையை வெட்டிக்கொள்வேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் தொடங்கி கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி சென்று தற்போது பஞ்சாப்பில் ராகுல் காந்தி பயணித்து வருகிறார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி இன்று பேட்டியளித்தார். அப்போது அவரிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனும், பாஜக எம்பியுமான வருண் காந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி “வருண் காந்தி பாஜகவில் உள்ளார். அவர் என்னுடைய இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு வந்தாலோ அல்லது கலந்து கொண்டாலோ அவருக்கு பிரச்சினையாகிவிடும்.
அவர் ஆர்எஸ்எஸ். சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால் எனக்கு அது ஒத்துவராது. வருண் காந்தியை நேரில் சந்தித்தால் அவரை கட்டியணைத்துக் கொள்வேன். ஆனால் அவரது சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஒருபோதும் ஆர்எஸ்எஸ். அலுவலகத்துக்குச் செல்லமாட்டேன். அதற்கு முன்பாக நான் என் தலையை வெட்டிக்கொள்வேன்” என்று தெரிவித்தார்.