"புனிதமான ரத்தத்தில் படம் வரைந்து காதலை வெளிப்படுத்துவது அவசியமற்றது"– மா.சுப்பிரமணியன்

“ரத்தம் புனிதமான ஒன்று. அப்படிப்பட்ட ரத்தத்தில் படம் வரைந்து காதலை வெளிப்படுத்துவதும், நட்பை வெளிப்படுத்துவதும் அவசியமற்ற ஒன்று. அப்படி செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது” என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் நடைபெற்ற அதிதீவிர சிகிச்சை மற்றும் அன்னப்பிளவு உதடு பிளவு சிகிச்சை மையத்தை திறந்து வைத்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தஞ்சை மாவட்டத்தில் தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கான மையம் உருவாகி கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் 708 மருத்துவமனை கட்டப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. பிப்ரவரியில் முதல் வாரத்தில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் திறந்து வைப்பார். இதில், தஞ்சை மாநகராட்சியில் 8, கும்பகோணத்தில் 3, பட்டுக்கோட்டையில் ஒன்று என மொத்தம் 12 மருத்துவமனைகள் புதிதாக திறக்கப்பட உள்ளன.
image
கொரோனாவிற்குப் பிறகு மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து உள்ளதா என ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. உடற்பயிற்சி செய்து உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சிகள் மாரடைப்பு வருவதை தடுக்க உபயோகமாக இருக்கும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரிலக்கத்தில் மட்டுமே உள்ளது. நேற்று 4000 பேருக்கு பரிசோதனை செய்ததில் ஆறு பேருக்கு மட்டுமே தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் உருமாற்றம் உலகம் முழுவதும் பரவிக் கொண்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை, போன்ற விமான நிலையங்களில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் 100 சதவீதம் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரே பகுதியில் நிறைய நபர்களுக்கு பாதிப்பு இருந்தால் அந்த பகுதியை மூடி பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாஸ்க் போட வேண்டும் என்ற சட்டம் 2020-ல் இருந்து நடைமுறையில் உள்ளது. மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது.
image
ரத்தம் புனிதமான ஒன்று. ரத்த தானம் செய்வதன் மூலம் எத்தனையோ உயிர்கள் பாதுகாக்கப்படுகிறது. எனவே அந்த ரத்தத்தை எடுத்து படம் வரைந்து காதலனுக்கும், காதலிக்கும் கொடுப்பது; அதன் மூலம் காதலை வெளிப்படுத்துவது நட்பை வெளிப்படுத்துவது அவசியமற்ற ஒன்று. ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைந்து காதலர்களுக்கு பரிசளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எம்ஆர்பி செவிலியர்கள் 4308 பேர் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. கொரோனா காலத்தில் பணியாற்றிய எம்ஆர்பி செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம் ஆகிய பிரிவுகளில் 128 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன ஆணையை விரைவில் முதல்வர் வழங்குவார். எம்ஆர்பி மூலம் செவிலியர்கள் எடுக்கும் போது ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.