21, 22 தேதிகளில் நடக்கிறது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பதற்கான சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: இந்திய தேர்தல் ஆணையம், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை அரசு செயலாளர் அறிவுறுத்தலின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களிடம் இருந்து தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவுகள் மேற்கொள்ளும் பணி கடந்த 1.8.2022 முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 3,657 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு ஆதார் எண் விபரங்களை படிவம் 6பி. யில் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்று வருகின்றனர்.வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் போதிய முன்னேற்றம் காணப்படாததால், பொதுமக்கள் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக நாளை  21.1.2023 மற்றும் 22.1.2023 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை படிவம் 6 பி மூலம் இணைத்து கொள்ளலாம். மேலும், ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இருப்பின் அவர்கள் படிவம் 6பி யில் குறிப்பிடப்பட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை அளித்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம். எனவே, வாக்காளர்கள் தங்களது ஒத்துழைப்பினை நல்கிடுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஆல்பி ஜான் வர்கீஸ்  தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.