இடைத்தேர்தல்… அண்ணாமலை டிமாண்ட்… சம்பவம் செய்வாரா ஈபிஎஸ்..?

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது, பிரச்சாரத்துக்கு தயாராகுவது குறித்த ஆலோசனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இன்று 2-வது நாளாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்க்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப் பணி இன்னும் மூன்று நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளரை நிறுத்த முடிவெடுக்கப்பட்டு வேட்பாளர் அறிவுப்பு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இருப்பினும், திமுக முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடக்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

அதேபோல, கடந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாக இம்முறை அதிமுக போட்டியிட வழிவிட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் அக்கட்சி வேட்பாளர் நிறுத்தப்படுவாரா அல்லது பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

இந்தநிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தாங்கள் போட்டியிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விரும்புவதாக கமலாலய வட்டாரத்தில் இருந்து சூடான தகவல் வந்துள்ளது. ஆனால், மற்ற மூத்த நிர்வாகிகளோ எடப்பாடி தலைமையிலான அதிமுகவை ஆதரிப்பதே சிறந்தது என அண்ணாமலையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட விரும்பினால் ஆதரவளிப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆனால், இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரையே நிறுத்த எடப்பாடி பழனிசாமி முனைப்பு காட்டி வருகிறாராம்.

இடைத்தேர்தல் விவகாரத்தில் அதிமுக – பாஜக தனித்தனியே ஆலோசனை நடத்தி வரும் நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பேசி ஓபிஎஸ் வழக்கம்போல கொளுத்தி போட்டுள்ளார். இருப்பினும், எடப்பாடி பழனிசாமி அண்ணாமலையின் விருப்பத்தை தகர்த்து தனது முடிவை அறிவிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.