“நான் இந்த எமர்ஜென்சி எக்ஸிட் கதவைத் திறக்கப்போவதில்லை, ஏனெனில்…" – தயாநிதி மாறன் கிண்டல் பதிவு

டிசம்பர் 10-ம் தேதி சென்னையிலிருந்து திருச்சிக்கு இண்டிகோ 6E-7339 விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது, அந்த விமானத்தின் அவசரவழிக் கதவை கர்நாடக பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா திறந்ததாகவும், அப்போது அவருடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இருந்ததாகவும் தகவல் வெளியானது. மேலும், தேஜஸ்வி சூர்யா விமான நிறுவனத்திடம் மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதிக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 29-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பெயர் குறிப்பிடாமல் கருத்து தெரிவித்திருந்தார்.

தேஜஸ்வி சூர்யா

இந்தச் செய்தி பரவலாகப் பேசப்பட்டதற்கிடையில், செவ்வாய்க்கிழமையன்று இண்டிகோ மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், “பயணி ஒருவர், அவசரகால வெளியேறும் கதவைத் திறந்திருக்கிறார். அவரின் இந்தச் செய்கையால் மற்ற பயணிகளிடையே பதற்றம் நிலவியது. உடனடியாகப் பயணி மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து, விமானப் பணியாளர்கள் விமானத்தின் அழுத்தத்தைச் சரிபார்த்தனர். அதன் பிறகு, விமானம் தாமதமாகப் புறப்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் விமானத்தில் அவசரகால கதவின் அருகே இருக்கும் வீடியோவை வெளியிட்டு, “நான் கோயம்புத்தூருக்குச் செல்ல இண்டிகோ விமானத்தில் எமர்ஜென்சி எக்ஸிட் அருகே தற்போது அமர்ந்திருக்கிறேன். ஆனால், நான் இந்த எமர்ஜென்சி எக்ஸிட் கதவைத் திறக்கப்போவதில்லை.

ஏனென்றால், அதைத் திறப்பது விமானத்துக்கும், விமான பயணிகளுக்கும் பாதுகாப்பானது அல்ல. மேலும், அப்படி திறக்காமல் இருப்பதால், நேரத்தைச் சேமிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் நான் மன்னிப்புக் கடிதம் எழுத வேண்டியதில்லை” எனத் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.