பவானி: பவானி சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிரைவரை தாக்கி காரை கடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், நெல்லூரிலிருந்து சேலம் வழியாக கோவைக்கு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை ஒரு கார் சென்று கொண்டிருந்தது. காரை, ஆந்திர மாநிலம், நெல்லூர், காப்பு வீதியை சேர்ந்த விகாஸ் டிராவல் (42) ஓட்டிச் சென்றார். ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த லட்சுமி நகர், காவேரி பாலம் அருகே சென்றபோது, வேனில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், காரை வழிமறித்தது. உடனே காரை நிறுத்திய விகாஸ் டிராவலை அக்கும்பல் தாக்கி கீழே இறக்கிவிட்டு, காரை கடத்தி சென்றுவிட்டது. இதுகுறித்து, அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சித்தோடு போலீசார் சென்று விகாஸிடம் விசாரணை நடத்தியபோது, அவருக்கு இந்தி மட்டுமே தெரிந்ததால், இந்தி மொழி தெரிந்த போலீசாரை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, கார் கடத்தப்பட்ட விவரம் தெரிந்ததால் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது சித்தோட்டை அடுத்த கங்காபுரம் ரோட்டோரத்தில் அந்த கார் நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட எஸ்பி சசிமோகன் மற்றும் போலீசார் சித்தோடு காவல் நிலையத்தில் முகாமிட்டு கார் டிரைவர் விகாஸிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
ஆந்திராவிலிருந்து கோவைக்கு சென்ற காரில் ரூ.2 கோடி பணம் இருந்ததாகவும், அதனையறிந்த கடத்தல் கும்பல் பின்தொடர்ந்து வந்து டிரைவரை தாக்கி காரைக் கடத்தியதோடு, பணத்தையும் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எஸ்பி சசிமோகன் கூறுகையில்,“கார் கடத்தப்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது. உரிமையாளரிடம் விசாரணை நடத்திய பின்னரே முழு விவரங்கள் தெரிய வரும்” என தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.