பாஜகவுக்கு எடப்பாடி வைக்கும் அக்னிப் பரீட்சை: ஓ ஹோ இப்படி ஒரு பிளானா?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில்
எடப்பாடி பழனிசாமி
தரப்பு சிறப்பு கவனம் செலுத்துவது தமிழ்நாடு அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியை மீறி வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

அதிமுக கூட்டணி வேட்பாளர் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சியான தமாகாவிடம் பேசி தாங்களே போட்டியிட உள்ளதாக சம்மதம் வாங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஏற்கெனவே தோல்வியடைந்த தொகுதி; ஆளுங்கட்சியை எதிர்த்து களமிறங்க வேண்டும்; ஓபிஎஸ் பிரிந்து நிற்பதால் அதிமுக வாக்குகளே சிதறுவதற்கான சூழல்; 2021இல் கூட்டணியில் இருந்த பாமக இப்போது கூட்டணியில் இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு திரும்பிய பக்கமெல்லாம் எதிர்மறையான அம்சங்களே நிறைய உள்ளன.

அப்படியிருக்க தமாகாவிடம் கொடுத்துவிட்டு போட்டியை வேடிக்கை பார்த்திருக்கலாமே, ஏன் எடப்பாடி பழனிசாமி இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என்ற பேச்சுதான் அரசியல் அரங்கில் எழுந்து வருகின்றன.

உண்மையில் இந்த தேர்தலில் அதிமுக களமிறங்குவது பாஜகவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்கு தானாம். ஓபிஎஸ், இபிஎஸ் பிரிந்து நிற்கும் நிலையில் பாஜகவின் ஆதரவு யாருக்கு, யாரை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டால் தான், முக்கிய முடிவுகளை எடுக்க முடியும் என்று நினைக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

ஓபிஎஸ்ஸை காரணம் காட்டி ஒருவேளை இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் பாஜகவுக்கு வேறு எண்ணம் இருக்கிறது என்பது உறுதியாகிவிடும். அதை காரணமாக வைத்து நாமும் கூட்டணியை முறித்துக் கொள்ளலாம். தற்போதைய சூழலில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் பாஜகவுக்கு தான் அதிமுக மிக அதிக தேவை. அதனால் அவர்கள் தனது ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துதான் ஆக வேண்டும்.

இரண்டில் ஒன்றை பார்த்துவிட வேண்டும் என்ற முடிவில் தான் எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு தொகுதியை தமாகாவிடமிருந்து வாங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பாஜகவிடமும் இன்று அதிமுக நிர்வாகிகள் ஆதரவு கோர உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.