சேலம் மாவட்டத்தில் ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே ஆத்துப்புதூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சம்பத் (35). இவர் சம்பவத்தன்று ஆசை வார்த்தைகள் கூறி ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமையை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்பு சிறுமிக்கு சம்பத் பாலியல் தொந்தரவு கொடுத்ததால், சிறுமி சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் சம்பத் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பத்தை கைது செய்ய முயன்றனர். அப்பொழுது போலீசாரிடமிருந்து தப்பி ஓடிய சம்பத் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து சம்பத்தை கைது செய்த போலீசார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.