சென்னை அருகே உள்ள மாதவரம் பால்பண்ணை ஜான்வாசு முதல் தெருவைச் சேர்ந்தவர் பாசில் லியோனார்டு. இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு கிராமம் ஜானகி நகரில் 2,400 சதுர அடி கொண்ட வீட்டுமனை ஒன்றை பிரகாஷ் என்பவரிடம் இருந்து வாங்கி அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், பாசில் லியோனார்டுக்கு சொந்தமான அந்த நிலத்தை சென்னை அயனாவரத்தில் உள்ள மதுரை தெருவைச் சேர்ந்த பிரதாப் என்பவரும், மயிலாப்பூர் அப்பு தெருவை சேர்ந்த ஜீவா என்ற பெரியசாமி என்பவரும் சேர்ந்து போலி ஆவணம் ஒன்றைத் தயாரித்து அதன் மூலம் பொது அதிகாரத்தைப் பெற்று அஞ்சலி தேவி என்ற பெண்ணுக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாசில் லியோனார்டு, இந்த மோசடி தொடர்பாக ஆவடி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் படி, போலீசார் நில மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக பிரதாப் மற்றும் ஜீவா உள்ளிட்ட இருவரையும் கைது செய்து, பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு சிறையில் அடைத்தனர்.