மயிலாடுதுறை பகுதியில் அரசு பேருந்து ஒன்று ஓட்டுனரே இல்லாமல் ஓடி சுவர் மீது மோதி நின்றுள்ளது.
மயிலாடுதுறை பகுதியில் இருந்து மணல்மேடு செல்கின்ற அரசு பேருந்து ஒன்று இன்று காலை மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்திற்கு மணல்மேட்டில் இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பயணிகள் இறங்கி சென்ற பின் பேருந்தின் ஓட்டுநர் இன்ஜினை அணைக்காமல் நியூட்ரலில் வைத்துவிட்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கி இடைவேளைக்கு சென்றுள்ளார்.
அப்போது, அந்த பேருந்து தானாக நகரத் துவங்கியது. இதை பார்த்த அங்கிருந்த மக்கள் பதறிப் போய் சிதறி ஓட்டம் பிடித்தனர். அப்போது, பொதுமக்கள் அனைவரும் ஓரமாக சென்று விட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பேருந்து பயணிகள் யாரும் இல்லாமல் தனியாக நின்று கொண்டிருந்தது.
எனவே, உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தின் முன் பக்கம் மற்றும் பேருந்து நிலைய சுவர் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.