ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுக்கோடியில் கடல் வழியாக சிலர் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி, தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்த சுங்கத்துறை அதிகாரிகள், கடற்கரை மணற்பரப்பில் இரண்டு மூட்டைகள் புதைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
அதன் பின்னர், இரண்டு மூட்டைகளையும் தோண்டி எடுத்த சுங்கத்துறை அதிகாரிகள், மூட்டையிலிருந்து சுமார் 6 லட்சம் மதிப்புள்ள காலணிகளை கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட அந்த காலணிகள் இலங்கைக்கு கடல் வழியாக படகில் கடத்தப்பட இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், போலீசார் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.