ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் களத்தில் சூடு பிடித்துள்ளது. பல அரசியல் கட்சித் தலைவர்கள் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தேர்தல் ஆணையருக்கும் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் “தேர்தல் பிரச்சார களமாக வழிபாட்டுத் தலங்களை பயன்படுத்தக் கூடாது. தேர்தல் பிரச்சாரக் களமாக வழிபாட்டு தலங்களை எந்த வகையிலும் பயன்படுத்துவதை தேர்தல் நடத்தை விதிமுறை பிரிவுகள் தடை செய்துள்ளது.
இதனை மீறி அரசியல் கட்சிகள் மற்றும் சன தனி நபர்கள் வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டால் அபராதத்துடன் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். இதுகுறித்து அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விதமான வழிபாட்டு தலங்களிலும் பிரச்சாரம் செய்வதும் வேட்பாளருக்கு ஆதரவாக பேசுவதும் தடை செய்யப்படுகிறது.