புதுச்சேரி | தனது தாத்தா குண்டும் குழியுமான சாலையால் விபத்தில் சிக்கியதால், சம்மந்தப்பட்ட சாலையை பேரனான சிறுவன் சீரமைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளாக வில்லியனூர் பத்துக்கண்ணு சாலை பிரதான சாலை சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக இருந்துள்ளது.
சம்பவம் நடந்த அன்று, அந்த சாலையில் சேந்தநத்தம் கிராமத்தை சேர்ந்த சேகர் (வயது 60) முதியவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது ஒரு பெரிய பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுது. தற்போது அவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதியவர் சேகரின் பேரன் சிறுவன் மாசிலாமணி (வயது 13), தனது தாத்தா கால் உடைய காரணமான அந்த சாலையின் பள்ளத்தில் வேறு யாரும் விழுந்து அடிப்படக் கூடாது என்று எண்ணி, தானே யார் உதவியும் இல்லாமல் அந்த சாலை பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
இதனை அறிந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன், சிறுவன் மாசிலாமணியை அவரின் வீட்டுக்கே சென்று பாராட்டினார்.
மேலும், சிறுவனின் இத்தகைய செயல் அரசுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக வையாபுரி மணிகண்டன் விமர்சித்துள்ளார்.