காஷ்மீரில் பயங்கரவாதிகளின் குண்டுவீச்சில் வாலிபர் காயம்

ஸ்ரீநகர்,

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் இட்கா பகுதியில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், வீரர்கள் மீது கையெறி குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பி ஓடினர்.

இந்த குண்டு குறி தவறி வேறொரு இடத்தில் விழுந்து வெடித்தது. இதில் அஜாஸ் அகமது தேவா (வயது 32) என்ற வாலிபர் காயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய பயங்கரவாதிகளை கைது செய்யும் பணிகளை போலீசார் தொடங்கினர். இதில் சந்தேகத்தின்பேரில் சிலரை அவர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

குடியரசு தினவிழா நெருங்கி வரும் நிலையில், இந்த குண்டுவீச்சு சம்பவம் ஸ்ரீநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.