திருவள்ளூர் மாவட்டத்தில் கிணற்றில் பிணமாக கிடந்த கூலி தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் முருக்கம்பட்டு பகுதியில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக திருத்தணி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து திருத்தணி போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கிணற்றில் இறந்து கிடந்தவர் தரணிவராகபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பார்த்திபன் (28) என்பதும், நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பார்த்திபன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.