இந்தியாவில் தாதாக்கள் உருவான வரலாறு சினிமா ஆனது

கன்னட திரையுலகிலிருந்து 'கே ஜி எப்', '777 சார்லி', 'விக்ராந்த் ரோணா' 'காந்தாரா' என பிரம்மாண்டமான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. கன்னட சினிமாவின் மார்கெட் தளம் விரிவடைந்திருப்பதால் அங்கு தைரியமாக பெரிய பட்ஜெட் படங்களை பான் இண்டியா படங்களாக உருவாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது தயாராகி வரும் படம் கப்ஜா. இதில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடித்துள்ளனர். கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் ஆர். சந்திரசேகர் தயாரித்திருக்கிறார். உபேந்திரா, கிச்சா சுதீப்புடன் ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா, சுதா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு 'கே. ஜி எஃப்' படப்புகழ் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநரான ஆர். சந்துரு இயக்கி இருக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: 1947ம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம். இந்த படத்திற்கு 'தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா' எனும் டாக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் உருவான வரலாற்றை இதில் பேசியிருக்கிறோம். வருகிற மார்ச் 17ம் தேதி புனித் ராஜ்குமார் பிறந்த நாளில் வெளியாகிறது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.