புதுடெல்லி: ஒன்றிய அரசு கடந்த 2020ம் ஆண்டு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் பகுதியில் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, விவசாயிகள் மீது காரைக் கொண்டு மோதியதில் விவசாயிகள் உட்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து விபத்து குறித்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் முதல் குற்றவாளியாக ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யபட்டார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி ஆஷிஷ் மிஸ்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு இடைக்காலமாக 8 வாரங்கள் ஜாமீன் வழங்குவதாகவும், இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த காலக்கெடுவில் ஆஷிஷ் மிஸ்ரா உத்திரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் தங்கியிருக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.