நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியை அடுத்த சோலூர்மட்டம் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. இந்த வன விலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியில் வந்து குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவது வழக்கமாகியது.
இந்த நிலையில், இன்று காலை பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் என்பவர் தனது வீட்டில் இருந்து, பணிக்கு செல்வதற்காக பரவக்காடு பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் வழியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த தோட்டத்தில் இருந்த சிறுத்தை ஒன்று நொடியில் பன்னீர்செல்வம் மீது பாய்ந்து தாக்கியது. இதனால், அச்சமடைந்த பன்னீர்செல்வம் சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்தனர்.
ஆனால், அதற்குள் அந்த சிறுத்தை அங்கிருந்து ஓடி அருகே இருந்த புதருக்குள் மறைந்து விட்டது. சிறுத்தை தாக்கியதில் அவரது கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்தவர்கள் அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், குடியிருப்பு பகுதியில் நடமாடும் இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும்” என்று அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.