திடீர் உடல்நலக்குறைவு நாஞ்சில் சம்பத்துக்கு தீவிர சிகிச்சை

நாகர்கோவில்: திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவால், கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குமரி மாவட்டம் திருவட்டார் அருகே மணக்காவிளையை சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத் (68). திராவிட இயக்க பேச்சாளர். சமீபத்தில் இவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக அவ்வப்போது வலிப்பு மற்றும் ஞாபக மறதி உள்ளிட்ட பிரச்னைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கான சிகிச்சைகளையும் நாஞ்சில் சம்பத் பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 23ம் தேதி இரவு சென்னையில் இருந்து ரயில் மூலம் நாகர்கோவில் வந்து கொண்டிருந்த நாஞ்சில் சம்பத்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ரயிலில் மயங்கினார். அவரை திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து நேற்று முன்தினம் மாலை கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் நாஞ்சில் சம்பத் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் சுயநினைவின்றி இருப்பதாக டாக்டர்கள் கூறினர். அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் உள்ளிட்ட திமுகவினர் சென்று நாஞ்சில் சம்பத் உடல் நலம் குறித்து விசாரித்தனர். குடும்பத்தினர் உடன் இருந்து கவனித்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.