பிபிசி நிறுவனம் கடந்த 2002 ஆம் ஆண்டில் குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த ஆவணப் படத்தில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தொடர்பு படுத்தி இருக்கிறது. இதனால் இந்த படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்தது.
இப்படத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ. கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணியும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில், பாஜகவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட நான் நினைப்பது என்னவென்றால், பிரிட்டன் அரசு சார்பில் நடத்தப்படும் பிபிசி சேனல் இந்தியர்களை பற்றி நீண்ட காலமாக தவறான எண்ணம் கொண்டிருக்கிறது. அந்த சேனலில் ஈராக் போருக்கு மூளையாக இருந்த பிரிட்டன் முன்னாள் உள்துறை அமைச்சர் ஜேக் ஸ்டராவின் கருத்தை, இந்திய நிறுவனங்கள் மீது பதிப்பது ஆபத்தான முன்னுதாரணம். இது நம் இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும் என்று கூறியிருந்தார்.
இதனால் அணில் அந்தோணிக்கு காங்கிரஸ் கட்சிக்குள் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இரவு முழுவதும் மிரட்டல் அழைப்புகளும் வெறுப்பு செய்திகளும் வந்திருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் குறிப்பிட்ட பிரிவினரிடமிருந்து வந்த பேச்சுக்கள் அவரை காயப்படுத்தி இருக்கின்றன. இதனால் அவர் காங்கிரஸின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அனில் அந்தோணி நேற்று (புதன்கிழமை) வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “காங்கிரஸ் கட்சியில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நான் வகித்துவந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.
கருத்துச் சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் எனது ட்வீட்டை திரும்பப் பெறும்படி கூறினர். நான் மறுத்துவிட்டேன். அன்பு பரப்பப்படுவதை ஆதரிப்பவர்களின் முகநூல் பக்கங்கள் வெறுப்பும் துஷ்பிரயோகமுமாக இருக்கிறது.இதற்குப் பெயர் பாசங்கு. வாழ்க்கை பயணப்பட்டுக்கொண்டே இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் தனது ராஜினமா கடிதத்தையும் இணைத்துள்ளார்