மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பம்பையன். இவர் மகள் ஈஸ்வரி. இவரும், இவருடைய அக்காள் சின்னப்பொண்ணு என்பவரும் சேர்ந்து அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் மல்லிகை பூ விவசாயம் செய்துள்ளனர்.
அங்கு, பூ பறிப்பதற்காக இருவரும் தினமும் காலை 6 மணிக்கு செல்வார்கள். இந்த நிலையில், இருவரும் நேற்று வழக்கம்போல் பூ பறிப்பதற்காக தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, திண்டுக்கலில் இருந்து மதுரை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஈஸ்வரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால், தூக்கி வீசப்பட்ட ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப்பார்த்து கதறி அழுத சின்னப்பொண்ணு இந்த விபத்து குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்தார். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.