திருப்பத்தூர் அருகே எருது விடும் விழா நடத்த அனுமதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொத்தூர் கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் தை மாதம் மயிலார் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சியான எருது விடும் விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இந்த வருடம் மயிலார் பண்டிகையை முன்னிட்டு கடந்த 23-ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் எருது விடும் விழா நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் பாதுகாப்பு காரணமாக இந்த விழா 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 30-ந் தேதி எருதுவிடும் விழாவை நடத்திக்கொள்ள அதிகாரிகள் அனுமதி அளித்து இருந்தனர். இந்த நிலையில், 30-ந் தேதிக்கு வழங்கப்பட்ட  அனுமதியை அதிகாரிகள் ரத்து செய்து அடுத்த மாதம் 10-ந் தேதி எருது விடும் விழாவை நடத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராமத்து மக்கள், நேற்று நாட்டறம்பள்ளியிலிருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இந்த சாலை மறியல் குறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், நாட்டறம்பள்ளி போலீசார் உள்ளிட்டோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலைமறியல் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் முடிவில், நாளை காலை ஒன்பது மணி முதல் மதியம் இரண்டு மணி வரை எருது விடும் விழா நடத்துவதற்கு அனுமதி அளித்தனர். அதன் பின்னர், பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.