ஒரே வழக்கில் இருவேறு தீர்ப்பு: சென்னை ஐகோர்ட்டுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஒரே வழக்கில் வெவ்வேறு விதமான தீர்ப்புகள் வெளியாகி இருப்பது குறித்து உடனடியாக கவனிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து செப்டம்பர் ஐந்தாம் தேதி நீதிமன்றத்தில் நீதிபதிகள் கூறிய முக்கிய விவரங்கள் மட்டும் தீர்ப்பாக வெளியான நிலையில், செப்டம்பர் 7ம் தேதி உயர்நீதிமன்றத்தின் இணையதளத்தில் அது வேறு விதமான தீர்ப்பாக பதிவாகி இருந்தது. இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

மேற்கண்ட விவகாரம் தொடர்பாக  நவம்பர் 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் சீலிடப்பட்ட கவரில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஒரே வழக்கில் இரண்டு வேறு விதமான தீர்ப்புகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி கேட்டுக் கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.