காவல் நிலையம் முன் அமர்ந்து கொண்டு ‘ஹூக்கா’ புகைத்து ‘ரீல்’ வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

ஹபூர்: உத்தரபிரதேசத்தில் காவல் நிலையம் முன்பு அமர்ந்து  ‘ஹூக்கா’ புகைத்துக் கொண்டிருந்ததை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டம் ஹபீஸ்பூர் காவல் நிலையத்திற்கு எதிரே அதேபகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், போதை வஸ்துவான ‘ஹூக்கா’ புகைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அதனை வீடியோவாக எடுத்து சமூக ஊடக தளங்களிலும் ரீல் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

இந்த ரீல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் தேடிவந்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஹபீஸ்பூர் காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்து கொண்டு, ஹூக்காவை புகைப்பது போன்று ரீல் வீடியோ எடுத்து அதனை வெளியிட்ட வாலிபரை கைது செய்துள்ளோம். அந்த நபர் வீடியோ எடுக்கும் போது போலீசாரின் கண்ணில் படவில்லை. தற்போது அந்த வீடியோவை அவரே வெளியிட்டதால் சிக்கிக் கொண்டார்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.