Budget 2023: பட்ஜெட்டில் நிதி அமைச்சரிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன?

பட்ஜெட் 2023: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். மோடி அரசின் இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால், அனைத்து தரப்பினர் மற்றும் அனைத்து துறைகளுக்கு இடையிலும் இந்த பட்ஜெட் குறித்து அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. நாட்டின் கண்களாக இருக்கும் பெண்களுக்கு இந்த பட்ஜெட் குறித்து உள்ள எதிர்பார்ப்புகள் என்ன? அவர்கள் தங்களுக்காக நிதி அமைச்சர் என்னென்ன அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என விரும்புகிறார்கள்? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம். 

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18% மட்டுமே பெண்களுக்குச் சொந்தமானது. இதுவரை முழுவதுமாக பயன்படுத்தப்படாத மகத்தான ஆற்றலைதான் இந்த எண்ணிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இந்தியாவின் விரைவான வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, அரசாங்கம் பெண்களுக்கான பல முற்போக்கான திட்டங்களையும், கொள்கைகளையும் செயல்படுத்தி வருகிறது. எனினும், இதில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது.

கொரோனா தொற்றுநோயின் தாக்கம் இன்னும் நம்மிடையே உள்ளது. அதில் அதிகமாக பாதிகப்பட்ட பிரிவினரில் பெண்களும் அடங்குவர். மேலும் பொருளாதாரத்தில் பாலின இடைவெளியைக் குறைக்க உதவும் போதுமான வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்த நிதியமைச்சருக்கு மத்திய பட்ஜெட் 2023 ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பின்வரும் ஐந்து அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.

சொத்துக்கள் மற்றும் கடன் கிடைக்கும் தன்மை

பொருளாதார பாலின இடைவெளியைக் குறைக்க நிதியமைச்சர் பெண்களுக்கான நிதிச் சலுகைகளை அதிகரிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கார்கள் மற்றும் சொத்துக்கள் போன்றவற்றை வாங்குவதற்கான வரிச் சலுகைகள் அளிக்கப்படலாம். இவை பெண்களுக்குக் குறிப்பிட்ட நிதிச் சலுகைகளுக்கான எடுத்துக்காட்டுகளாக இருக்கலாம். இந்த நடவடிக்கையின் மூலம் பெண்களுக்கு கூடுதல் சொத்துக்களை பெறுவதற்கான தூண்டுதல் கிடைப்பதோடு, அவர்களது பொருளாதார சுதந்திரமும் மேம்படும். 

கவனிப்பு மற்றும் கர்ப்பகாலம்

அரசாங்கத்திடம் இருந்து அதிகப் பணம் கிடைத்தால், குழந்தை பெற்ற தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான திட்டங்கள் மூலம் இன்னும் அதிக நற்செயல்களை செய்ய முடியும். தாய்மார்களுக்கான பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா போன்ற திட்டங்களை அதிக மக்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவது இதில் அடங்கும். மேலும், பெண்களுக்கு மலிவு விலையில் குழந்தை பராமரிப்பு கிடைப்பதை எளிதாக்குவதற்கான வழிகளையும் நிதி அமைச்சர் அமைத்துத்தரலாம். குழந்தை பராமரிப்பு, பெண்களின் நீண்ட கால வேலைவாய்ப்பிற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேர்த்தியான குழந்தை பராமரிப்பு திட்டங்கள் இருந்தால், அதன் விளைவாக, பெண்கள் வேலை மற்றும் குடும்பக் கடமைகளை சமநிலைப்படுத்தி சீராக செயலற்ற முடியும். 

ஓய்வூதியத் திட்டங்கள்

ஆண்களை விட பெண்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதும், பொதுவாக, கணவன் மனைவி ஜோடியில், கணவனை விட மனைவி அதிக வயது வரை உயிர் வாழ்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆகையால், கணவன் மறைந்த பிறகு, மனைவிக்கு பெரிய ஓய்வூதிய நிதி மற்றும் அதிக ஓய்வூதியம் தேவைப்படுகிறது. ஏற்கனவே ஓய்வூதியத் திட்டம் இல்லாதவர்களுக்கு நிதி வழங்குவது அல்லது பெண்களுக்கான ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது பற்றி அரசாங்கம் சிந்திக்கலாம்.

பெண் தொழில்முனைவோர் 

பெண் தொழில்முனைவோருக்கு நிதியுதவி கிடைப்பது குறிப்பிடத்தக்க தடையாக உள்ளது. அதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்குச் சொந்தமான வணிகங்கள், கடன்கள், மானியக் கடன்கள் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு வரிச்சலுகைகள் மற்றும் விதை மூலதன மானியங்கள் ஆகியவற்றுக்கான எளிதான அணுகல் வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கின்றனர். 

கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு

அரசாங்கம் ஏற்கனவே செயல்படுத்தி வரும் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற பல திட்டங்களுக்கு கூடுதலாக, கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான பெண்களின் அணுகலை மேம்படுத்தும் ஏற்பாடுகளை பட்ஜெட்டில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதிக நிதியுதவி மூலம் இந்தத் திட்டங்களுக்கான செயல்பாடு மற்றும் வரம்பை அதிகரிக்க முடியும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.