குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்: நீரை குடித்த கிராம மக்கள் பீதி

மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு. துர்நாற்றம் வீசும் குடிநீரை குடித்ததால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவரது மூன்றாவது மகன் சரவணகுமார் (34). சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ள இவர், கடந்த 24 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு வீடு திரும்பவில்லை இதையடுத்து பல இடங்களில் பெற்றோர் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ராஜேந்திரபட்டிணம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக தகவல் பரவியது. இதையடுத்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக மேலே சென்றுள்ளார். அப்போது காணாமல் போன சரவணகுமார் சடலமாக குடிநீர் தொட்டியில் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
image
தகவல் அறிந்து விரைந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து சரவணகுமாரின் உடலை பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சரவணகுமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து குடிநீர் தொட்டிக்குள் போட்டுள்ளனரா என்ற கோணங்களில் போலீசார் மேற்கொண்டுளளனர்.
பொதுமக்கள் குடிக்க பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் பிணம் கடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக விருத்தாசலம் சுகாதாரத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் என அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகளும் அந்த கிராமத்தில் குவிந்துள்ளனர். இதையடுத்து குடிநீர் தொட்டியில் இருந்த நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு தொட்டி முழுக்க சுத்தம் செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
image
பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் தீவிர பரிசோதனையில் சுகாதாரத் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தின் முழு விவரமும் விசாரணைக்குப் பின்னர் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். குடிநீர் தொட்டிக்குள் ஆண் சடலம் கிடந்த சம்பவம் விருத்தாசலம் சுற்று வட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் அவர்களிடம் கேட்டதற்கு, இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று அனைவருக்கும் உடல் பரிசோதனை செய்யப்படும். உயிரிழந்தவர் யார்? அவர் எப்போது இதில் விழுந்தார் என்றும் விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.