கூட்டணிக்கு புதிய பெயர்; பாஜக ஆதரவை நிராகரிக்கும் எடப்பாடி..? உச்சகட்ட பரபரப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் அணியின் சார்பாக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தென்னரசுவை வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக பாஜகவின் ஆதரவை எடப்பாடி பழனிசாமி அணி எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் அண்ணாமலையிடம் இருந்து நல்ல தகவல் இதுவரை வரவில்லை.

இந்த பரபரப்பான நேரத்தில் சென்னை டி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அண்ணாமலை கட்சி நிர்வாகிகளிடம் ” நமக்கு 2024 தேர்தல்தான் முக்கியம். அதற்குள் நாம் கட்சியை வலுப்படுத்தவேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் நாம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பு உள்ளது என்று அண்ணாமலை கூறியதாக கமலாலய தகவல் கூறுகிறது.

இந்த நிலையில், இடைத்தேர்தலுக்கு தயாராகி வரும் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது அணி வேட்பாளரை அறிவித்தார். மேலும், அதிமுகவின் பணிமனையில் ”தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி” என்று புதிதாக பெயரிடப்பட்டுள்ளது. எனேவ, இதில் பாஜக இடம் பெறவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

வழக்கமாக பாஜக தலைமையில் உருவாகும் கூட்டணிக்கு ‘தேசிய ஜனநாயக கூட்டணி’ என்றும், காங்கிரஸ் தலைமையில் உருவாகும் கூட்டணிக்கு தேசிய முற்போக்கு கூட்டணி என்றும் அழைக்கப்படும். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த முறை மக்களவை தேர்தலில் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் (பாஜக) அங்கம் வகித்தது. ஆனால், இந்த இடைத்தேர்தல் பணிமனையிலேயே பாஜகவை கழட்டி விட்டு தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி பெயர் வைத்திருப்பது மக்களைவை தேர்தலிலும் பாஜகவை கழட்டிவிட முடிவெடுத்துவிட்டாரா என்ற கேள்வி வலுவாக எழுகிறது.

ஏற்கனவே ஓபிஎஸ், சசிகலாவை ஓரணியில் திரட்டி அதிமுகவை வலுப்படுத்தி ஆதாயம் பெறலாம் என்ற எண்ணத்தில் பாஜக இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் அதற்கு செவி சாய்க்காமல் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலையுடன் ஈகோ கிளாஷ் ஆகிவிட்டதா என்று விவாதம் எழுந்துள்ளது. மேலும், இன்று அல்லது நாளைக்குள் தமிழக பாஜக அதன் முடிவை அறிவித்துவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.