கடலூர் மாவட்டத்தில் உள்ள உச்சிமேடு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற 28 வயது நபர் கடலூர் மாவட்ட நீதித்துறையில் தொழில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். ஜெயக்குமாருக்கு சிதம்பரத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது.
இதற்கு இருதரப்பு உறவினர்களும் மண்டபத்திற்கு வந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் மணப்பெண்ணும், மணமகனும் வாகனத்தில் ஊர்வலமாக வந்தார்கள். இரவு 9 மணி வரை இந்த திருமண ஊர்வலம் நடைபெற்றது வரவேற்பு முடிந்து இருவரும் தங்களது அறைக்கு சென்றனர்.
அதன் பின், நள்ளிரவு நேரத்தில் இருவரும் செல்போனில் கூட பேசிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில், மறுநாள் காலை தாலி கட்டுகின்ற நேரத்தில் மணமகன் யாரிடமும் தெரிவிக்காமல் அங்கிருந்து காணாமல் போய்விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த பெண்ணின் உறவினர்கள் வேறு வழியில்லாமல் தங்களது உறவுக்கார இளைஞரான இளவரசனை திடீரென மண மகனாக மாற்றி திருமணம் செய்து வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.