திருப்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு: குண்டர் சட்டத்தை எதிர்த்து கொள்ளையர்களின் மனு தள்ளுபடி

திருப்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டதை ரத்து செய்யக் கோரி வடமாநில கொள்ளையர்கள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள ஜே.கே ஜுவல்லரி நகை கடையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடையை உடைத்து 3 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக கடையின் உரிமையாளர் ஜெயகுமாா் திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொள்ளை சம்பவம் தொடா்பாக திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கொள்ளையில் ஈடுபட்ட நபா்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று உறுதிப்படுத்திய காவல்துறையினர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மஹ்தாப், பத்ருல், திலாகாஸ், முகமது சுப்ஹான் ஆகியோரை மகாராஷ்டிராவில் கைது செய்தது காவல்துறை. பின்னர் அவர்களை நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக தமிழ்நாடுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 3 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி, 25 லட்ச ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான உத்தரவை ரத்து செய்யக் கோரி நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் சுந்தர் மற்றும் நிர்மல்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, இவர்கள் மீதான குற்றத்திற்கு அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும், குண்ட சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்தால், இவர்கள் வழக்கிலிருந்து தப்பிக்க நேரிடும் என்றும் காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது. 

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வட மாநில கொள்ளையர்கள் 4 பேரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்ய மறுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.