தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் மகன் காளிதாசுக்கும் பிரபா என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், காளிதாஸ் திருமணத்திற்குப் பிறகு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், அவரை மனைவி பிரபா கண்டித்துள்ளார். இருப்பினும், அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரபா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதையடுத்து, காளிதாஸ் மாமனார் வீட்டிற்குச் சென்று தனது மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், பிரபா வேலைக்கு சென்றால் தான் வீட்டுக்கு வருவேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இதனால், மனமுடைந்த காளிதாஸ் பூச்சி மருந்தை குடித்து தனது வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான நான்கே மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.