பாக்., போலீஸ் சீருடையில் வந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி| The terrorist who attacked in Pakistan came in police uniform

பெஷாவர்: பாகிஸ்தானில், சமீபத்தில் மசூதியில் 100 பேர் பலியான தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்தை, போலீஸ் சீருடையில் வந்திருந்த பயங்கரவாதி நடத்தியது தெரியவந்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெஷாவர் நகர் உள்ளது. இங்கு, பலத்த பாதுகாப்பு நிறைந்த போலீஸ் குடியிருப்புப் பகுதியில் உள்ள மசூதியில், ஜன., 30ம் தேதி மதிய வேளை தொழுகையின்போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான போலீசார் உட்பட 100 பேர் பலியாகினர்; 200க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலில் மசூதி இமாமும் கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்தில், மசூதியின் கூரை பெயர்ந்து விழுந்து பெருத்த சேதம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியின்போது, தற்கொலை தாக்குதல் நடத்தியதாக சந்தேகப்படும் நபரின் தலை மட்டும் கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து, கைபர் பக்துன்க்வா மாகாண காவல் துறை தலைவர் மோஸம் ஜா அன்சாரி கூறியதாவது:

போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை தாக்குதல் நடத்திய நபர், போலீஸ் சீருடையில், தலைக்கவசம் அணிந்து, இரு சக்கர வாகனத்தில் குடியிருப்புக்குள் வந்துள்ளார். இதனால், இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை சோதிக்கவில்லை. மேலும், அந்த நபர் அங்கிருந்த போலீஸ் ஒருவரிடம், தொழுகை நடத்தும் இடம் குறித்து விசாரித்துள்ளார். இது, பாதுகாப்பு குறைபாட்டை அப்பட்டமாக காட்டுகிறது.

இந்நிலையில், கண்டெடுக்கப்பட்ட துண்டான தலையை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியுடன் பொருத்திப் பார்த்ததில், போலீசாருக்கு அந்த மர்ம நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது.

நான்கு அடுக்கு பாதுகாப்பு உள்ள இந்த வளாகத்தில், பெரும் பாதுகாப்பு குறைபாடு எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், இச்சம்பவத்துக்குப் பின்னணியில் உள்ள பயங்கரவாத வலையை நெருங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.