உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து
எடப்பாடி பழனிசாமி
தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்.
இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று முக்கிய உத்தரவை பிறப்பித்தது.
அதில், “ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளரை பொதுக் குழுவைக் கூட்டி முடிவு செய்யுங்கள். பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரையும் அனுமதிக்க வேண்டும். அவைத் தலைவர் பொதுக் குழுவைக் கூட்ட வேண்டும். பொதுக்குழு முடிவு செய்யும் வேட்பாளரை அவைத் தலைவர் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.அவைத் தலைவரின் பரிந்துரை மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு உற்சாகத்தை தந்துள்ளது. முன்னதாக பாஜக இரு தரப்பும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தனித் தனியே பேச்சுவார்த்தை நடத்தியது. திமுகவை எதிர்க்க அனைத்து கட்சிளும் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. பாஜகவின் முன்னெடுப்பை அமமுக டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் வரவேற்றனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பும் இருவரும் இணைந்து செயல்பட வலியுறுத்தியுள்ளதால் ஓபிஎஸ் தரப்பு குஷியில் உள்ளது. “நடப்பதெல்லாம் நன்மைக்கே. எங்களைப் பொறுத்தவரை எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது” என்று ஓபிஎஸ் தனது உள்ளத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்போ அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறது. சேலத்தில் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான செம்மலை, “சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கொடுத்த தீர்ப்பு செல்லுமா, செல்லாதா? ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லுமா, செல்லாதா? என அந்த ஒரு கேள்விக்குத்தான் உச்ச நீதிமன்றம் பதில் சொல்ல வேண்டும். தீர்ப்பு சொல்ல வேண்டும். ஆனால், அவர்கள் சொல்லி இருப்பதை தீர்ப்பாக நான் கருதவில்லை.
அந்த ஆலோசனை எப்படி இருக்கிறது என்று சொன்னால் கீழ் கோர்ட்டில் தான் பஞ்சாயத்து பண்ணுவார்கள், அரசியல் கட்சிகளை வைத்து. உச்ச நீதிமன்றத்திற்கு என்ன வேலை என்று சொன்னால் இன்டர்ப்ரெட்டேஷன் ஆப் லா. சட்டத்தை வியாக்கியானம் செய்து தீர்ப்பு சொல்ல வேண்டும். ஆனால், அவர்கள் பஞ்சாயத்து பண்ண வேண்டிய அவசியம் என்ன? இதற்கான காரணம் என்ன? கட்டாய கல்யாணம் செய்ய வற்புறுத்துவதைப் போன்று உள்ளது. உச்சநீதிமன்றத்தினுடைய இந்த ஆலோசனை.
கட்டாய கல்யாணம் கூட அல்ல, விவாகரத்து ஆன கணவனையும் மனைவியையும் சேர்ந்து குடும்பம் நடத்துங்கள் என்று சொல்வதைப் போல் உள்ளது. இது எப்படி சாத்தியமாகும் ” என்று கேள்வி எழுப்பினார்.