விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் அணு உலைகளை நிறுவுவது தொடர்பாக அமெரிக்க நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் அளித்துள்ள பதில்:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கொவ்வடா பகுதியில் 6 அணு உலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் (டபிள்யூஇசி) அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தற்போதைய நிலையில் அணுமின் நிலையம் அமைப்பதற்காக, நிலம் கையப்படுத்துதல், சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறுதல் மற்றும் கள ஆய்வுகள் போன்ற திட்டத்தின் கட்டுமானத்துக்கு முந்தைய நடவடிக்கைகள் நடந்தேறி வருகின்றன. அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு மொத்தம் 2,079 ஏக்கர் நிலம் தேவை. இதுவரை, 2,061 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது. இந்த நிலங்கள் இந்திய நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன்(என்பிசிஐஎல்) பெயரில் மாற்றப்பட்டுள்ளது. அணுமின் நிலைய திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது 8,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.