புதுடில்லி, சாரதா நிதி நிறுவன முறைகேட்டில் பலன் அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி உள்ளிட்டோருக்கு சொந்தமான 6.30 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக, அமலாக்கத்துறை நேற்று தெரிவித்தது.
மேற்கு வங்கம், அசாம், ஒடிசாவில், சாரதா சிட் பண்ட் என்ற பெயரில் 2013 வரை நடந்து வந்த நிதி நிறுவனம், மிகப் பெரிய பண முறைகேட்டில் ஈடுபட்டது. மக்களிடம் இருந்து 2,459 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், 1,983 கோடி ரூபாய் பணம் திருப்பிக் அளிக்கப்படவில்லை.
இந்த வழக்கில், சாரதா நிதி நிறுவனத்துக்கு சொந்தமான 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து உள்ளது.
இந்நிலையில், சாரதா நிதி நிறுவனம் மற்றும் அதன் வாயிலாக பலன் அடைந்தவர்களுக்கு சொந்தமான, 3.30 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்து மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை, அமலாக்கத்துறை நேற்று பறிமுதல் செய்தது.
இதில், முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சிதம்பரத்தின் மனைவி நளினி, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., தேவேந்திரநாத் பிஸ்வாஸ், அசாம் முன்னாள் அமைச்சர் அஞ்சன் தத்தா ஆகியோரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement