நாகர்கோவில்: “அதிமுகவை இணைக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது” என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசியல்கட்சிகள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் மாற்று கருத்துஇல்லை. கால சூழலுக்கேற்ப தான் போட்டியிட வேண்டும். திமுகவும்,அதிமுகவும் பல இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை.
ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து முடிவெடுக்க மாநில தலைவர் அண்ணாமலைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது . ஈரோடு தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் வெல்வார் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் எனக் கூறுவதுண்டு.
பாஜகவுக்கு ஊர் ஒன்றுபட்டால் தான் கொண்டாட்டம். இதை உணர்ந்து தான் அதிமுகவை இணைக்கும் முயற்சியை பாஜக மேற்கொண்டு வருகிறது. அதிமுகவை பாஜக பிளவுபடுத்த முயல்வதாக கூறுகின்றனர். திமுகவிலிருந்து அதிமுக உருவாவதற்கு காரணமாக இருந்த பழைய சரித்திரத்தை கூறினால் திமுகவினருக்கு தான் அசிங்கம் என்றார்.