இந்திய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த பொழுது ஏற்பட்ட மதக்கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை இங்கிலாந்தை சேர்ந்த பிபிசி நிறுவனம் தயாரித்து “இந்தியா: மோடி என்கிற கேள்வி” எனும் தலைப்பில் வெளியிட்டது.
இந்த ஆவணப்படம் பெரும் சர்ச்சை உண்டாக்கிய நிலையில் இந்தியாவில் சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திரையிடப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி சர்ச்சைக்குரிய ஆவண படத்தை தமிழாக்கம் செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் இன்று திரையிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், திராவிடர் கழக துணை தலைவர் பூங்குன்றன், திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.