இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பலருடைய உடலின் அங்கமாகவே மாறிவிடும் அளவிற்கு ‘ஸ்மார்ட் போன்’களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பலரும் ‘ஆன்லைன்’ விளையாட்டு செயலிகளை விரும்பி பதிவிறக்கம் செய்து விளையாடி வருகிறார்கள். ‘ஆன்லைன்’ விளையாட்டுகளில் இளைஞர்களின் திறமைக்கு சவால்விடும் வகையில், பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கின்றன. அதில் ‘ரம்மி’ போன்ற சூதாட்டம் விளையாடுகிறவர்களின் மனங்களை வசியம் செய்து மயக்குவதுடன், பண ஆசை காட்டியும் ஈர்க்கிறது. இந்த விளையாட்டுகளில் பண இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று அந்த நிறுவனங்களே எச்சரிக்கை விடுக்கின்றன. ஆனால் எப்படியாவது ஒருமுறை வெற்றி பெற்றுவிடலாம். இழந்த பணத்தை மீட்டுவிடலாம்’ என்ற நம்பிக்கை வெறியோடு பலர் தொடர்ந்து பணத்தை இழந்து வருகிறார்கள். சேமித்த பணத்தை இழந்து கடனாளியானவர்கள் தற்கொலை முடிவை தேடுகிறார்கள். தமிழகத்தில் மட்டும் ஆன்லைன் சூதாட்டங்களில் இதுவரை 25க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுபோல் நாட்டின் பல பகுதிகளிலும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சூதாட்ட செயலிகளை தடை செய்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தால் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் சீனாவின்138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழக்கும் செயலிகளை அவசர நிலை அடிப்படையில் தடைசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கும் பணிகளை மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் துவக்கி உள்ளது
மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு முன்பு 288 சீன செயலிகளை ஆய்வு செய்யத் தொடங்கியது. இந்த ஆய்வில் இந்திய மக்களின் தனிப்பட்ட தரவுகளை சீன செயலிகள் எடுத்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது.இந்த நிலையில் சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை முடக்கவும், தடை செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.