திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கழுத்தை அறுத்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்து பயணிகள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்தப் பெண் விருதுநகர் மாவட்டம் தும்முசின்னம்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி மகாலட்சுமி(43) என்பது தெரியவந்தது. மேலும் மகாலட்சுமி தற்கொலை செய்து கொள்வதற்காக தனக்குதானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மகாலட்சுமி, திண்டுக்கல்லில் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.